Monday, August 27, 2012

நம்பிக்கை பிறந்தது...

அன்று காலை வழக்கம் போல சபை ஆராதனை முடிந்து சகோதரர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு என் ஹெல்மேட்டையும், தோள் பையையும் இரு கரங்களில் பிடித்துக் கொண்டே சிதறி கிடக்கும் காலணிகளில் கண்கள் அலசிக்கொண்டிருக்க வாசலை அடைத்து இருந்த கூட்டம் என்னை தானாக வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. ஒரு காலணி கண்ணில் பட்டுவிட்டது, அதன் ஜோடியை தேடிக் கொண்டே வெளியேறும் போது ....

ராஜா! ஒரு நிமிஷம் சிலருக்கு ஜெபித்துவிட்டு நானும் உன் கூட வந்துறேன்... கொஞ்ச நேரம் அங்க உக்காருபா ... 
என்றார் சபையின் மூத்த சகோதரி, வெள்ளி கம்பி முளைத்தது போல வெளீர் முடியோடு ... தள்ளாடும் கால்கள்... சமீபத்தில் ஏற்பட்ட விபத்தினால் அதிக நேரம் நிற்க முடியாமல் மேஜையில் சாய்ந்து கொண்டே... புன்னகை மாறாது தன்னிடம் வரும் ஒவ்வொரு குடும்பத்தையும் அன்போடு விசாரித்து, சிலரை உரிமையோடு அதட்டி... விசாரித்து ஜெபித்துக் கொண்டிருந்தார்....

40 வருடத்துக்கு முன்பாக இதே பகுதியில் தெருவெங்கும் ஆடி, பாடி தேவ அன்பை வெளிப்படுத்தி சம்பாதித்த ஆத்துமாக்கள் ஆச்சுதே கால் வலித்தாலும் விசாரிக்காமல் வர முடியுமா? ... அருள் நாதரை ஏற்றுக்கொண்டதால் கையில் மூன்று பிள்ளைகளுடன் தெருவில் ஆனாதையாக விடப்பட்ட போதும், அந்த இளம் வயதில் பலராலும் மன உளைச்சலுக்கு ஆளான போதும்... புனிதரின் சமூகமே போதுமானது என்று கருதி எதை குறித்தும் வெட்க்கபடாமல் தலை நிமிர்ந்து, சத்தியத்தை உரக்க சொன்னதின் விளைவு 14 க்கும் மேற்ப்பட்ட சபைகள்... ஆனால் இதில் ஒன்றையும் தனக்கென வைத்துக் கொள்ள துணியவில்லை..

இதை எல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டே ...  என்னையும் இப்படி மாற்றும் சுவாமி  என்ற வேண்டுதலோடு
உன்னையே வெறுத்து விட்டால் ஊழியம் செய்திடலாம்....
சுயத்தை சாகடித்தால் சுயமாய் வாழ்ந்திடலாம்... 
என்ற பாடலை முணுத்துக் கொண்டிருந்தேன் .... ஒரு தளர்ந்த குரல் என் காதில் ஒலித்தது மகனே!.... போகலாமா?”

ஹ்ம்ம்... போகலாம் அம்மா... என்று வெளியே வந்து பார்த்தால் என் காலனி அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடந்தது... வேகமாய் மாட்டிக் கொண்டு.. என் இருசக்கர வாகனத்தில் அவர்களையும் ஏற்றிக் கொண்டு ஓட்டத் துவங்கினேன்...

ஒரு பெட்டி-கடையை கடந்த போது ....  கொஞ்சம் வண்டியை நிறுத்து பா... நிறுத்து பா... என்று படபடத்த குரலில் கெஞ்ச ... நானும் பதறிக் கொண்டு வண்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஓரங்கட்டினேன்..

ஒரு விஷயம் சொல்லனும் யார்ட்டயும் சொல்லாத...  என்று சொல்லி கொண்டே தன் கைபைக்குள் கையை விட்டார்.. உள்ளே இருந்து என்ன வர போகிறதோ என்ற ஆவலில் பையையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க.... நான்காய் மடக்கி இருந்த ஒரு வார இதழை வெளியே எடுத்தார்.

சுற்றும் முற்றும் பார்த்து அதை பிரித்து என் கையில் திணித்தார்... அதை பார்த்ததும் அதிர்ந்து போனேன்... ஒரு விக்ரக சாமியருடன் ... கிறிஸ்தவ சாதுவா ? என்று அதிர்ந்து.. தலையை நிமிர்த்தி அவரின் முகத்தை பார்த்தேன்....

கண்கள் குளமாகிக் கொண்டிருக்க ... கண்ணீர் மடை உடைக்க தயாராகி கொண்டிருந்தது…  மக்கள் நடமாடும் முக்கிய சாலை அது... தாயாரை கட்டுப்படுத்த ஏதாகிலும் செய்தே ஆக வேண்டும் என்று மனம் சொல்ல.... வேண்டாம் அம்மா... இவர்களுக்காக அழுது என்ன பிரயோஜனம் என்று நொந்து கொண்டேன்....

நாங்கள் அப்போது தான் கடந்த வந்த பெட்டி கடையை காண்பித்து அங்கு தான் இதை வாங்கினேன்... அந்த கடக்காரர் 5 வருஷமா... போலி கடவுள்.. வெள்ளைகார கடவுள்னுலாம்  சொல்லும் போது பொறுமையா ஆண்டவர பத்தி சொல்லி .... கிறிஸ்தவ தலைவர்கள் செய்ற நல்ல காரியங்கள சொல்லி.... அன்பு தெய்வம் இயேசு சுவாமி பிள்ளையா மாறின நீயும் இயேசு சுவாமி போல நல்ல உள்ளதோட வாழ முடியும்னு சொல்லி போராடிட்டு இருந்தேன்... நேத்து அவனே என்னை கூப்பிட்டு இலவசமா இந்த பத்திரிக்கைய வச்சுக்கோங்கனு கொடுக்கறான்... 

இதை வாசித்து இராவெல்லாம் நெஞ்சு அடைச்சு போச்சு... ஐயோ ! குடும்பம் சொந்தம் எல்லாம் விட்டு போராடுனதுலாம் நொடில வீணா போச்சுதே... நமக்காக அவரையே கொடுத்தாரே அந்த தியாகத்த மனுஷங்க மறந்துட்டாங்களா?.... இனி எப்படி வேதத்த கைல தூக்கிட்டு வீதில சத்தியத்த சொல்ல முடியும்.... அந்த கடைக்கரனுக்காக அஞ்சு வருஷமா போராடுனது ஒரு நிமிஷத்துல போச்சுதே... இப்பகூட மனசு வலிக்குது... போன வாரம் நடந்த விபத்துல அந்த பஸ்காரன் பிரேக்க போடாம இருந்திருந்தா இதெல்லாம்  பார்க்காம போயிருப்பேனே... என்று சொல்லி முடிக்கும் முன் கண்ணீர் கன்னங்களை தாண்டி இருந்தது....

திடீரென கண்ணீரை துடைத்து, என் கையில் இருந்த பத்திரிக்கையை விடுக்கென வாங்கி கைப்பையில் மீண்டும் நுழைத்துக் கொண்டார்.... ஒன்றும் புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்க.... பட்டை பூசிய ஒரு நடுத்தர வயதுள்ள ஒருவர் அருகில் வந்து கைகளை கூப்பி  ....  அம்மா! நீங்க சொன்ன இயேசு சுவாமி ரொம்ப நல்லவரு.... எனக்கு பல வருஷமா இருந்த சிறுநீரக நோய் சரி ஆய்ட்டுன்னு டாக்டர் சொல்றாங்க... மருந்து மாத்திரை கொடுக்காத சுகத்த உங்க சுவாமி கொடுத்துட்டாரு...பணம் இல்லாம செய்யாம விட்ட ஆப்பரேஷன அவரே இலவசமா செஞ்சுட்டாறு ... நானும் உங்க கோயிலுக்கு வர போறேன்... இனி அவரு தான் எல்லாமே...  என்று சொன்னேதும்
அந்த தாயார் என் கரத்தை இறுக பிடித்து அவரை நோக்கி

தேவனுக்கு நன்றி சொல்லுங்க ஐயா... அவர் ஒடுக்கபடுகிறவர்களுக்கு நியாயம் செய்பவர்... இந்த உலகத்தின் உண்மை ரட்சகர்.. தம்மை உண்மையாய் நோக்கி கூபிடுகிரவங்களா கைவிடமாட்டார்... அவர் தனது சபையில தம்முடைய மக்கள கண்டிப்பா சேத்துருவாறு... அடுத்த வாரம் சபைக்கு மறக்காம வந்துருங்க என்று ஆனந்தத்தோட சொல்லி விடை கொடுத்து மீண்டும் வாகனத்தில் ஏறிக் கொண்டார்....

தாயாரின் இறுக்கமான பிடி அவர்களுக்கு மீண்டும் வந்திருந்த நம்பிக்கையை உணர செய்தது.

ஆம் நண்பர்களே! என்னடா கிறிஸ்தவம் என்ற மனநிலையில் இருந்த என்னோடும் இந்த சம்பவம் மூலம் தேவன் இடைபட்டார்...

அவர் தனது சபையை குறித்த கரிசனையோடு செயல்படுகிறார்... தம் சொந்த இரத்தத்தால் சம்பாதித்த சபையை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வது இல்லை.

ஊழியர்களை அல்ல கிறிஸ்துவையே முன் நிறுத்தி செல்லும் எவருக்கும் இந்த செய்தி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை..

ஆனால் ஒட்டுமொத்த கிறிஸ்தவத்தின் பிரதிநிதிகளாய் தங்களை காட்டிக்கொள்ளும் இவர்களை நம்பும் கிறிஸ்தவர்களின் நிலைமை....மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் கதியாகிவிடுமே என்ற நினைவில் தான் மனம் பதைபதைக்கிறது.

அன்பு சகோதரரே, இந்த காரியம் நிச்சயமாக உண்மையாக தோன்றினாலும் , நாம் நமக்குள்ளே பிரிவினை வராமல் காப்பது நல்லது , இந்த காரியத்தினால் அநேகர் பின் மாற்றத்தினால் விலக நேரிடலாம் , ஆகையால் நாம் முடிந்தவரை இந்த காரியம் தேவனுக்கு இழுக்கு உண்டாகத படிக்கு ஜெபிப்போம்

No comments:

Post a Comment