விலை ஏறப்பெற்ற திருஇரத்தமே
அவர் விலாவினின்று பாயுதே..
விலையேறப் பெற்றோனாய் என்னை...மாற்ற
விலையாக ஈந்தனரே....
என்று பாடிக் கொண்டே என் நீண்ட பயணத்தின் பாதி தூரத்தைக் கடந்துவிட்டேன். இன்னும் பாதி தொலைவு செல்ல வேண்டுமே என்ற சோர்வு சரீரத்தை தாக்கிக்கொண்டிருந்த போது ஐந்து நெடுஞ்சாலைகள் சந்திக்கும் ஒரு பாலத்தை நோக்கி என் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். பாலத்தின் மைய பகுதியில் டீசண்டாக உடை உடுத்திய ஒருவர் ஒரு கையில் லாப்டாப்புடன் தன்னை கடக்கும் எல்லா வாகனத்தின் முன்பும் மற்றொரு கையை அசைத்து லிப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். மின்னல் வேகத்தில் வாகனங்கள் பறந்து கொண்டிருக்க அவரை யாரும் கண்டுகொண்டது போல தெரியவில்லை. நான் அவரை கடந்த போது என்னை நோக்கி கைகளை அசைத்து ஒரு எதிர்ப்பார்ப்போடு சைகை காட்டினார்., எனினும் மனம் கேட்கவில்லை. வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓரமாக சற்று சிரமத்துடன் நிறுத்தினேன். நான் வாகனத்தின் வேகத்தைக் குறைக்க ஆரம்பிக்கும் போதே அவர் என்னை நோக்கி ஓடத் தொடங்கி இருக்க வேண்டும். ஏனென்றால், நான் வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தால் அவர் என் அருகில் நிற்கிறார். 45 வயதுக்கு ஏற்ற தோற்றம். “ ரொம்ப தேங்க்ஸ்! ரொம்ப நேரம் இங்கேயே நின்றுகொண்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவர் இங்கே இறக்கிவிட்டார். பக்கத்துல எந்த பஸ் ஷ்டாப்பும் இல்ல. யாரும் லிப்டும் தரல. என்னை அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டால் போதும்” என்று சொல்லி வண்டியில் ஏறி உட்கார்ந்து பெருமூச்சு விட்டார். அவர் வேதனை புரிந்ததும், வண்டியை நிறுத்தியது குறித்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன். “ நீங்க எங்க போகணும், நான் போற வழியா இருந்தா உங்கள இறக்கி விடறேன்” என்று சொன்னதும் அவர் கொஞ்சம் உற்சாகத்தோடு தான் செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னார். “நானும் அந்த வழியா தான் போறேன், உங்கள அங்கேயே விட்றேன்” என்று சொல்லி வெகு தூரம் தனியாக செல்லும் எனக்கு ஒரு கம்பனி கிடைத்துவிட்டது என்று உற்சாகமாக வாகனத்தை செலுத்தினேன்.என் உடல் சோர்வு வாகனத்தை நிறுத்த இடம் தரவில்லை
“உங்க பேறு என்னங்க?” என்று ஆரம்பித்தேன்.
“அப்துல் மாலிக்!”, என்று சொல்லி அமைதியாகி விட்டார்.
சிறிது நேரம் சென்றிருக்கும், என்னை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். என் பெயர், ஊர் எல்லாம் கேட்டுக் கொண்டே வந்தார். நானும் ஒவ்வொன்றாக பதில் சொல்லிக் கொண்டே இருந்தேன். அவர் நிறுத்துவதாக இல்லை.
தொடர்ந்து அவர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்த நான், அவரிடம் ஒரு கேள்வியை கேட்டேன். நிச்சயம் என்னுடைய கேள்வியை எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த கேள்வி இதுதான் , “நீங்க இயேசுவை தெய்வமாக ஏற்றுக் கொள்வீர்களா? அவரை குறித்து உங்க வேதம் என்ன சொல்லுது?”
இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு சொன்னார் “எந்த மனுஷனையும் கடவுள்னு சொல்றது தப்பு. இயேசு ஒரு இறைதூதுவர் (நபி) அவ்ளோ தான். அவர் ரொம்ப நல்லவர் ஆனா கடவுள் இல்லை.”
“அப்போ கடவுள் யார்? அவர் எப்படி இருப்பார்?” என்று உடனே கேட்டேன்.
“கடவுள் ஒரு நியாதிபதி, நாம் வாழ்க்கைல செஞ்ச எல்லா தப்புக்கும், நல்லதுக்கும் தீர்ப்பு கொடுப்பார்” என்று கட கடவென கொட்டினார்.
“தெரிஞ்சே செய்ற தப்புக்கு தண்டனை கொடுத்தா சரி தான், தெரியாம பண்ண தப்புக்கு?” என்று கேட்டேன்.
“தெரியாமா.... பண்ண தப்புக்கு” என்று இழுத்து சொன்னார். “தெரியாம பண்ண தப்புக்கு தண்டனை கிடையாது, தெரிஞ்சு பண்ணா மட்டும் தான் தண்டனை”
“ஓகோ! அப்போ.. தெரிஞ்சு ஒரு தப்பு பண்ணிட்டு பின்னால மனசு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டாலும் தண்டனை தானா? என்றேன்.
“அதுலாம் கிடையாது, தெரிஞ்சு தப்பு பண்ணா தண்டனை தான்” என்று உறுதியாகச் சொன்னார்.
“கடவுள் நியாதிபதியா இருக்கிறது சரி தான். அவர் அன்பா இருக்காரா?” என்று கேட்டேன்.
சிறிது நேரம் பதில் இல்லை, “ என்ன யோசிக்கிறீங்க? கடவுளோட அன்ப உங்க வாழ்க்கைல அனுபவிச்சதே இல்லையா?” என்றுதும்
“ஆமாம் அவர் அன்பாவும் இருக்கார். ஆனா நியாதிபதியாவும் இருக்கார்” என்று விழுங்கி விழுங்கி சொன்னார்.
“சரி, உங்களுக்கு பிள்ளைகள் உண்டா?” என்று கேட்டேன்.
“ஒரு மகன், +2 படிக்கிறான்” என்று சொன்னார்.
“உங்கள் மகன் தெரிந்தே ஒரு தவறு செய்துவிட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் அவனோடு இனி பேசவே மாட்டேன் என்று தண்டனை கொடுத்துவிட்டீர்கள். சில காலம் சென்ற பிறகு அவன் செய்த தவறுக்கு மனம் வருந்தி கண்ணீரோடு உங்களிடம் மன்னிப்பு கேட்டால், மன்னிக்க மாட்டீர்களா?” என்று கேட்டேன்.
“எப்படி மன்னிக்காமல் இருக்க முடியும். கண்டிப்பாக மன்னித்து அவனோடு பேசுவேன்” என்றார்.
“நீங்களே உங்கள் மகன் தெரிந்து செய்த தவறுக்கு வருந்தும் போது மன்னித்தால், நம்மை படைத்தவர் மன்னிக்க மாட்டாரா?” என்றதும் சொன்னார்.
“கடவுள் அன்பா இருக்கார் ஒத்துக்கிறேன், ஆனால் தெரிஞ்சு செய்ஞ்ச தப்ப எப்படி மன்னிக்க முடியும்?” என்று குழப்பத்தில் கேட்டார்.
“கடவுள் நியாதிபதியாவும் இருக்கிறார். அன்பாவும் இருக்கிறார் தானே?” என்று கேட்டேன்
“ஆமாம்” என்றார்.
“சரி, நல்லது செஞ்சவங்க பரதேசுக்கு போவாங்க, தப்பு பண்ணவங்க நரகத்துக்கு போவாங்க தானே?” என்றேன்
“ஆமாம்” என்றார்.
“உலகத்துல தப்பு(பாவம்) பண்ணாதவங்க யாரது ஒருத்தர் உண்டா?” என்றேன்.
“இல்லை, எல்லாரும் பாவம் பண்ணவங்க தான்” என்றார்.
“கடவுள் நியாதிபதியா இருக்கறதால பாவம் பண்ண மனுஷன் பரதேசுக்கு போக முடியுமா?”
“கண்டிப்பாக போக முடியாது தான்” என்றார்.
“கடவுள் அன்பா இருக்கறதால எல்லாரும் பரதேசுக்கு வரணும் தான நினைப்பார்?” என்று கேட்டதும்.
“ஆமாம், அப்படி தான் நினைப்பார்” என்றார்.
“அவர் நீதியுள்ளவரா இருக்கறதால எந்த மனுஷனும் பரதேசுக்கு போக முடியாது, ஆனா அவர் அன்பா இருக்கறதால எல்லா மனுஷனும் பரதேசுக்கு வரணும்னு நினைக்கிறார். அவர் அன்பு நம்ம பரதேசுக்குள்ள அனுமதிச்சாலும் அவர் நீதி நம்ம பரதேசுக்குள்ள அனுமதிக்காது. அவர் அன்புக்காக நிதியையும், நீதிக்காக அன்பையும் விட்டுக் கொடுக்க முடியாது. காரணம் அவர் பூரணமானவர்(PERFECT). அதனால அன்பு நிறைந்த தேவன் மனுஷன் மேல வர வேண்டிய நீதியை(தண்டனையை) தன் மேல ஏத்துக்க முடிவு செய்தார். மனுஷனோட தண்டனைய மனுஷ ஸ்தானத்தில் தான் ஏத்துக்க முடியும். அதனால தான் தேவன் இயேசுவாக வந்தார். மனுஷகுமாரன் என்று அழைக்கப்பட்டார். நம் மீது வைத்த அன்பால மனுஷனோட தண்டனையான மரணத்த ஏத்துக்கிட்டார். அவர் தேவனா இருந்ததால மரணத்தை வென்று இன்றும் ஜீவிக்கிறார். அவர் மூலமாய் பரதேசுக்குள் நம்மை அழைத்து செல்ல காத்திருக்கிறார்.” என்று விடாமல் சொல்லி முடிக்கவும் அவர் இறங்கும் இடமும் வந்தது.
வண்டியில் இருந்து இறங்கியதும் சொன்னார் “கடவுள் உண்மையா அன்புள்ளவர் தான். நான் தான் புரிஞ்சுக்கவில்லை. உங்கள சந்திச்சது ரொம்ப சந்தோஷம். என் மகன் பரிட்சைக்காக ப்ரே பண்ணிக்கோங்க” என்று சொல்லி தெளிந்த மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு கடந்து சென்றார்.
என் உள்ளமும் சந்தோஷத்தால் நிறைந்து இருந்தது. பரதேசுவிலும் சந்தோஷம் தான் நிறைந்து இருந்திருக்கும் என்று நினைத்து கொண்டே என் பாடலையும் பயணத்தையும் தொடர்ந்தேன் ....
விலை ஏறப்பெற்ற திருஇரத்தமே
அவர் விலாவினின்று பாயுதே..
விலையேறப் பெற்றோனாய் என்னை...மாற்ற
விலையாக ஈந்தனரே....
பயணம் தொடரும்.......

No comments:
Post a Comment