துறைமுகத்துக்கு விடை கொடுத்துப் பிரிந்து போகும் கப்பலை
மினுக்கு உடை உடுத்தியவர் பரபரப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். அவரை நோக்கி வந்த
மற்றொரு வயதானவர், “ஏன் இத்தனை பரபரப்பு? கப்பலில் ஏதேனும்
அனுப்பியிருக்கிறீர்களா?” என்று வினவியதும் சற்று
சுதாரித்துக்கொண்டு தான் செய்திருக்கும் தியாகச் செயலைப் பெருமையோடு “என் எல்லா
சொத்தையும் விற்று சோமாலியாவிற்கு பத்து கோடி மதிப்புள்ள பொருட்களை ஊழியத்திற்காக
அனுப்பி வைத்திருக்கிறேன்” என்றார். அதற்கு வயதானவர் “நானும் ஒரு
பொருளை அனுப்பியிருக்கிறேன்” என்று சொல்லி அமைதியாய்
கப்பலுக்கு விடை கொடுத்தார். “அப்படி என்ன ‘ஒரு பொருள்’ அனுப்பி இருக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, பொறுமையுடன் பெரியவர்
சொன்னார் “என் ஒரே மகளை
சோமாலியாவிற்கு ஊழியம் செய்ய அனுப்புகிறேன்” என்றார். மினுக்கு
உடைக்காரரின் தியாக உணர்வு, வயதானவரின் தியாகத்திற்கு
முன் பனி மேல் பாய்ந்த உஷ்ணம் போல் கரைந்துவிட்டது.
ஆம், நாமும் கூட கிறிஸ்த்துவின் ஊழியத்திற்கு செய்யும் உதவிகளையும், கைமாறுகளையும் தியாகமாக எண்ணிவிடுவது உண்டு. நம்முடைய உதவிப் பொருளோ
செல்வமோ கவர்ந்திழுக்கும் தியாகமாக இருக்குமா என்பது ஐயமே. ஆனால் உன்னத
நோக்கத்திற்காக நம்மையே கொடுத்துவிடுவது அனைவரயையும் கவர்ந்திழுக்கும் தியாகமாக
அமைந்துவிடும். அப்படிப்பட்ட கவர்ந்திழுக்கும் தியாகி தான் எப்பாப்பிரோதீத்து.
“எப்பாப்பிரோதீத்து”:
எப்பாப்பிரோதீத்து - என்ற சொல்லின்
அர்த்தமே கவர்ந்திழுதிப்பவன் அல்லது வனப்புள்ளவன்/வசீகரிப்பவன். தன் பெயருக்கு
ஏற்றவனாய் தன்னையே கிறிஸ்துவிற்கு அர்ப்பணித்து நம் அனைவராலும் கவரப்பட்டவனாய்
உயர்ந்து நிற்கும் தேவ மனிதன் எப்பாப்பிரோதீத்து.
பிலிப்பி பட்டணம்:
மக்கெதோனியா நாட்டில் உள்ள பிலிப்பி பட்டணத்தைச் சார்ந்தவர்
எப்பாப்பிரோதீத்து. பிலிப்பி, நெயப்போலி என்ற துறைமுக
பட்டணத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. ரோம, கிரேக்க
சாம்ராஜியங்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க
பட்டணங்களில் ஒன்றாக விளங்கியது. இந்தப் பட்டணம் மாமன்னர் அலெக்ஸான்டரின் தந்தை பிலிப் என்பவரால் உருவாக்கப்பட்டது. கிமு 31
இல் அகஸ்துராயன் ரோம படை வீரர்களையும், தளபதிகளையும் இந்தப் பட்டணத்தில் குடியேற்றினான்.இங்கு வாழ்ந்த அனைவரும் ரோம குடியுரிமை பெற்றவர்கள். ஆகவே இவர்கள் கடுமையான ரோம
சட்டங்களுக்கு விலக்கப்பட்டிருந்தனர். ஐரோப்பாவில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட முதல்
பட்டணம் என்ற பெருமை பிலிப்பி பட்டணத்தையே சாரும்.
பிலிப்பிவிற்கு நற்செய்தியின் வருகை:
ஆசியாவை நோக்கி பயணப்பட்டிருந்த பவுலடிகள் இந்தப்
பட்டணத்திற்கு வந்த விதத்தையும், சூழலையும் அப்போஸ்தலர் நடபடிகள் 16
ஆம் அதிகாரம் விளக்கிக் கூறியுள்ளது. பித்தினியா
நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணின பவுலை ஆவியானாவர் தடுத்து துரோவாவுக்கு
அனுப்பியதையும், பின்னர் துரோவாவிலே மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் பவுலடிகளின் தரிசனத்தில் தோன்றி தங்களுக்கு உதவி செய்ய வருமாறு வேண்டிக்கொண்டதைக்
கண்டு, துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே
நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி பிலிப்பி பட்டணத்தை அடைந்ததை வாசிக்கிறோம்.
கர்த்தருடைய சுவிசேஷம் அறிவிக்க தேவன் தன்னை அழைத்த உடனேயே தாமதிக்காமல் விரைந்து
ஓடி தன் பணியை பவுலடிகள் நிறைவேற்றுகிறார்.
காவலில் பவுல்:
தம்முடைய அயராத உழைப்பாலும், சோர்வடையாத பயணங்களாலும்
சின்ன ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் கிறிஸ்துவினுடைய சுவிஷேசத்தை
எடுத்துச் சென்ற பவுலடிகள் இறுதியாக ரோமாபுரியில் வீட்டுக் காவலில்
வைக்கப்படுகிறார். இதனை அப்போ-28:30,31 வசனங்களில்
வாசிக்கலாம்.
30 பின்பு
பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,
இந்த செய்தியை ரோமாபுரி, மக்கெதோனியா இடையே
பிரயாணம் செய்யும் வியாபாரிகள் மூலம் பிலிப்பி சபை அறிந்திருக்க வேண்டும். தங்களை
கிறிஸ்துவின் அண்டையில் நடத்தியவரின் நிலை அறிந்து பிலிப்பி சபை துடித்துப் போனது, பவுலுக்கு எப்படியாகிலும் உதவ வேண்டும் என்று முடிவு செய்தது. பிலிப்பி
சபை அதிக தரித்திரமுள்ள, உபத்திரவம் நிறைந்த சபையாக
விளங்கியது. இதை 2கொரி8 ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம். ஆனாலும் தரிசனத்தில் தன்னிடம் உதவி கேட்க வந்த பிலிப்பி தேசத்து மக்களுக்கு
பவுலடிகள் ஓடிப் போய் செய்த உதவி பிலிப்பி விசுவாசிகளுக்கு மறக்க முடியததாகிப்
போனது. ஆகவே தான் பவுல் சிறைப்பட்டு இருக்கிறதைக் கேள்விப்பட்டவுடன் தங்கள்
தரித்திரத்தையும் பொருட்படுத்தாமல் அவருக்கு உதவி
செய்ய ஒரு மனிதனை அனுப்புகிறார்கள்.(நாமும் இதுபோல நமக்கு ஞான உபதேசம் செய்தவர்களை
மறக்காமல் அவர்கள் தேவையில் உதவிடுவோமாக) கனம் பொருந்திய பவுலடிகளுக்கு உதவ
கனமுள்ளவனையே தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். அந்த கனமுள்ளவன் தான்
எப்பாப்பிரோதீத்து.
சவால் விடும் வாழ்க்கை:
எப்பாப்பிரோதீத்துவைக் குறித்து வேதம் ஆறு வசனங்களே
குறிப்பிடுகிறது. இவனை மோசே, எலியா, பவுல் போன்ற பெரிய பக்தர்களோடு ஒப்பிட
முடியாது என்றாலும் இவனும் நமக்கு சவால்
விடுபவனாக பரிணமிக்கிறான். ஒருவேளை மோசே, எலியாவைப் போல
நாம் சாதனை புரியாவிடிலும் எப்பாப்பிரோதீத்துவைப் போலாவது வாழ்ந்துவிட வேண்டும்.
பவுலடிகளின் வாழ்க்கை நமக்கு எட்டா உயரம் போலத் தெரியலாம், அவரைப்
போல தீவிரவாதியாக வாழ்வது கடினமே. பேதுருவின் வாழ்க்கை கூட நம்மால் செயல்படுத்த
முடியாத ஒன்று போலத் தான் தோன்றுகிறது. படகில் மீன் இல்லை, வருத்தத்தோடு வலைகளை அலசிக் கொண்டிருந்தவன் இயேசுவானவரின் வார்த்தைக்குக்
கீழ்ப்படிந்த போது படகு நிரம்பத்தக்க மீன்கள் கிடைத்தது. ஆனால் அதை அனுபவிக்கக்
கூட நேரம் கொடுக்காமல் தன் பின்னே இயேசுவானவர் வரச் சொன்னபோது பதில் ஏதும் பேசாமல்
பின்சென்ற பேதுருவின் தியாகம் எட்டாக் கனி தான். (நமக்கு தேவன் தரும் செல்வங்களை அனுபவிப்பதில் கவனம் செலுத்தாமல் தேவனைப் பின் தொடர்வதை பிரதானமாய்க்
கொள்வோம்.) நாளை நடப்பது என்னவென்று தெரியாமல்
தியாகத்தோடு அவன் வாழ்ந்தது போல வாழ முடியாது என்ற அதைரியம் நமக்கு வரலாம்.
இவர்கள் செய்த அற்ப்புதங்கள், ஆற்றின பிரசங்கங்கள்
போன்று நம்மால் செய்ய முடியாது என்று நினைப்போருக்கு எப்பாப்பிரோதீத்துவின் வாழ்க்கை
ஒரு சவால்.
ஆதிசபையில் இவன் ஒரு முன்னணி தலைவன் அல்ல, ஒரு
எளிய தொண்டன் தான். பெரிய பக்தர்களைப் போல இல்லாவிடிலும் இவனைப் போன்ற சிறு
பக்தர்கள் போலாவது வாழ்ந்துவிடவேண்டும் என்ற வீரத்தீர்மானம் உங்கள் நெஞ்சில்
பிறந்திட வேண்டும். மோசேயைப் போல தேவனோடு முக முகமாய் பேசும் அனுபவம்
இல்லாவிட்டாலும் எளிய எப்பாப்பிரோதீத்துவின் கவர்ந்திழுக்கும் வாழ்க்கை நமக்கு
இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பியேதாலேயே வேத புத்தகத்தில்
எப்பாப்பிரோதீத்துவுக்கு ஆறு வசனங்களை ஏற்படுத்தித் தந்தருளி இருக்கிறார்.
உபத்திரவம் நிறைந்த சபையிலிருந்து வந்த போதிலும்
எப்பாப்பிரோதீத்து அபூர்வ மனிதனாய் பிரகாசிக்கிறார். “குப்பையில்
மாணிக்கம்” என்பார்களே அதுபோல. மாணிக்கம் போல
பிரகாசிக்க இவர் என்ன அத்தனை அருமையான பிரசங்கம் செய்தாரா? என்று நீங்கள் கேட்டால் அதற்கு பதில், “இல்லை”. இவருடைய எந்தப் பிரசங்கமும் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இவர்
வாழ்க்கை அத்தனை அருமையானதாய், தீவிரவாதியான பவுலையே
கவரும் வண்ணமாய் அமைந்துவிட்டது.
“உங்கள் பிரசங்கத்தை விட உங்கள் வாழ்க்கையே அதிக வலிமையாய் பேசுகிறது”
குருவுக்கு மிஞ்சின சீஷன் இல்லை என்பதற்கு உதாரணமாய்
பவுலடிகளும் வாழ்ந்து காட்டினார். ஆகவே தான் (பிலிப்பியர் 4:9) பவுல் தைரியமாய்
சொல்கிறார் “நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும்
இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்” இதுபோன்ற வாழ்க்கை அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்துவிடும்.
இயேசுவும் தாம் பிரசங்கித்தது போல அல்ல தாம் வாழ்ந்தது போல வாழவே நம்மை
அழைக்கிறார். (1பேதுரு2:21) “ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள்
தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப்
பின்வைத்துப்போனார்.”
கர்த்தருக்கு இன்று தேவை பிரசங்கிப்பதை வாழ்ந்து காட்டும்
மனிதர்கள் தான். ஏனென்றால் இன்று பிரசங்கங்களுக்குப் பஞ்சம் இல்லை, பிரசங்கிப்பதை
வாழ்ந்து காட்டும் மனிதர்களுக்குத் தான் பஞ்சம். உங்கள் வாழ்க்கை ஒரு
பிரசங்கமானால் தேவனையே கவர்ந்திழுக்கும் மனிதனாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில்
எந்த ஐயமும் இல்லை.
பின்னணி:
எப்பாப்பிரோதீத்து பிலிப்பி சபையில் ஏழை மக்கள் கொடுத்த
தாராள காணிக்கையை எடுத்துக்கொண்டு ரோமாபுரியில் காவலில் இருக்கும் பவுலிடம் கொண்டு
வருகிறான். காணிக்கை கொண்டு வந்தவன் பவுலடிகளின் நிலையைப் பார்த்து மனம் உடைந்து
போனான், பவுலடிகளுக்கு உதவி செய்ய அவரோடு தங்கிவிட்டான். மக்கெதோனியாவுக்கும்
ரோமாபுரிக்கும் எழுநூறு மைல் தூரம். நீண்ட பிரயாணம் அவன் உடலை அதிகமாய் சோர்வுக்கு
உட்படுத்தியிருந்தது. சோர்வை பொருட்படுத்தாமல் பவுலுக்கு அவன் செய்த பணிவிடை அவன்
உடலை பாதித்தது. இந்த பாதிப்பு அவனை மரணம் வரை கொண்டு சென்றுவிட்டது. ஆனாலும்
தேவனுடைய மிகுந்த இரக்கத்தினால் உயிர் பிழைத்தான். எப்பாப்பிரோதீத்து
வியாதிப்பட்டதை அறிந்த பிலிப்பி சபை மிகுந்த வருத்தத்தில் மூழ்கியது, பிலிப்பி சபை வருத்தம் அடைந்ததை அறிந்த எப்பாப்பிரோதீத்துவும் சொல்லொண்ணா
துக்கத்தில் கஷ்ட்டப்பட்டான். இந்த இருவரின் துக்கத்தையும் பவுலடிகளால் தாங்க
முடியாததால் எப்பாப்பிரோதீத்துவை மறுபடியும் பிலிப்பி சபைக்கு அனுப்பி வைப்பதால்
அவன் சுகமானதை அவர்கள் அறிந்து துயரத்தில் இருந்து விடுபடுவார்கள் என்ற உயரிய
நோக்கோடு தனக்கு பணிவிடை செய்ய வந்தவனை திருப்பி அனுப்புகிறார். (இதுவே உண்மையான
அன்பின் அடையாளம். உங்கள் சபையில்/ ஐக்கியத்தில் உள்ள ஒருவரது துக்கம் உங்களை
பாதித்தது உண்டா?) எப்பாப்பிரோதீத்துவை பவுல் அனுப்பும்
போது பிலிப்பி சபையார் தனக்கு அளித்த காணிக்கைக்கு நன்றிக்கடிதம் எழுதி அவன்
கையில் கொடுத்து அனுப்புகிறார். இதுதான் பிலிப்பியருக்கு பவுல் எழுதிய நிருபம்.இதில் தான் நம் தியான நாயகன் எப்பாப்பிரோதீத்துவைக் குறித்து 7 தன்மைகளை
ஆவியானவரின் தூண்டுதலால் பவுல் குறிப்பிடுகிறார். அதுவே நம் தியானத்தின் ஆதாரம்.
(பிலிப்பியர் 2: 25-30)
25 மேலும், என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு
உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.
26 அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான்
வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும்
வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.
27 அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல்
துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.
28 ஆகையால்
நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என்
துக்கங் குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்.
29 ஆனபடியினாலே
நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.
30 ஏனெனில்
நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின்
ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.
தேவ ஆவியானவரின் உணர்த்துதலின் பேரில் எப்பாப்பிரோதீத்துவைக்
குறித்த மூன்று தன்மைகளை தியானிக்கப் போகிறோம்.
1. என் சகோதரன்
2. உடன் வேலையாள்
3. கனமுள்ளவன்
1. என் சகோதரன்:
சகோதர சிநேகத்தால் தன் குருவையும் தன்பால் கவர்ந்து
இழுத்தவன் தான் எப்பாப்பிரோதீத்து. ஒரு சில மாதங்களோ வாரங்களோ தான் எப்பாப்பிரோதீத்து
பவுலடிகளோடு இருந்திருக்கு வேண்டும். ஆனாலும் இந்த குறுகிய காலத்தில் தன் கபடமற்ற சகோதர சிநேகத்தால் பவுலடிகளுடைய இருதயத்தைக் கொள்ளையடித்து
வசீகரித்துவிட்டான். ஆகவே தான் பவுலடிகள் எப்பாப்பிரோதீத்துவைக்
குறித்து எழுத ஆரம்பிக்கும் போது வெள்ளத்தில் உடைந்த மடை போல, இதயம் திறந்து எப்பாப்பிரோதீத்துவை பல கோணங்களில் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார்.
(பிலி 2:25) மேலும், என்
சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு
உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.
பல கோணங்களில் எப்பாப்பிரோதீத்து
வருணிக்கபட்டாலும், பவுலடிகளின் இருதயத்தில் இருந்து
பிறந்த முதல் வார்த்தை “என் சகோதரன்”. இது மேலோட்டமாக சொல்லப்படவில்லை. சகோதரன் என்று குறிப்பிடாமல் “என் சகோதரன்” என்று
குறிப்பிடுவதால் இருவருக்கும் இடையேயான ஆழமான உறவு வெளிப்படுகிறது. பவுலைடிகள்
உரிமையோடு அழைக்கும் விசேஷித்த மனிதனாக இங்கு பரிணமிக்கிறான்.
கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, மீட்கப்பட்ட
யாவரும் சகோதர சகோதரிகளாய் இருக்கிறோம். “சகோதரன்” என்னும் வார்த்தை சக-உதிரன் என்னும் சொல்லில் இருந்து உருப்பெருகிறது. நாம் இந்த வார்த்தையின்
கருத்தாழத்தை உணர்ந்து சொல்கிறோமா? பிறப்பின்படி தாயின்
ஒரே இரத்தத்தால் பிறந்த இருவரை சகோதரர் என்று அழைக்கிறோம். ஆனால் தேவனுடைய
விலையேறப்பெற்ற இரத்தத்தினால் புதிதாக பிறந்த நாம் உண்மையான ஆழமான சகோதர
சிநேகத்தைக் காண்பிக்க வேண்டும்.
ஆதிசபையில் அனைவரயும் சகோதரர் என்றே அழைத்தனார். ஒரு
முரடனாக, கிறிஸ்துவின் சபையை துன்புறுத்திய பவுலை அனனியா முதன் முதலில் சந்திக்க
வந்தபோது “சகோதரனாகிய சவுலே” என்று அன்போடு அழைக்கிறான் (அப்போ 9:17). ஆதிசபையில் ஒரே குடும்பத்தைப்
போல எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். பல்வேறு இடங்களில் இயங்கிய
தேவனுடைய சபையை ஒரே குடும்பமாய்க் கண்டார்கள். இவர்களுக்குள் இருந்த சகோதர உணர்வு
இவர்கள் உறவுகளை வலிமையாய் இயக்கியது. (உங்கள் உறவு சகோதர உணர்வோடு கலந்து இருக்கிறதா?)
சகோதர உணர்வு அவர்கள் உறவை இயக்கிய விதம் குறித்து
வேதத்தில் காண முடிகிறது. பவுலை கொலை செய்ய வந்த போது சகோதரர் அதை அறிந்து அவனை தப்புவித்தார்கள். எருசலேமிலே பஞ்சம் வந்த போது
அந்தியோகிய விசுவாசிகள் யுதாவில் இருக்கிற சகோதரருக்குப்
பணம் சேகரித்தார்கள். இந்த சகோதர உறவும், நாம் அனைவரும்
தேவனுடைய வீட்டார்(எபே 3:14,15) என்ற உணர்வும் இன்று நம்
சபைகளில் வெளிப்பட வேண்டும். நம் சபைகள் இந்த பாடல் போல விளங்கினால் உலகத்தையே
கவர்ந்திழுக்கலாமே.
உயர்வுமில்லை அங்கு
தாழ்வுமில்லை;
ஏழை இல்லை பணக்காரன் இல்லை;
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்.
இயேசுவின் குடும்பம் ஒன்று
உண்டு .....
அன்பு நிறைந்திடும் இடம்
உண்டு .....
யோசேப்பை தன்னுடைய சகோதரர்கள் வெறுத்துக்
குழியில் தள்ளினாலும் பல ஆண்டுகளுக்கு பிறகு சகோதர்களைக் காணும் யோசேப்பின் உள்ளம்
சகோதர பாசத்தால் துடித்தது. அந்த சகோதர உணர்வு கண்ணீராக வெளிக் கொணர்ந்தது.
யோசேப்பு தனியே சென்று சத்தமிட்டு அழுததாக வாசிக்கிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தினால்
பிறந்த சகோதர்களின் தவற்றை யோசைப்பைப் போல நாம் மன்னிக்கும் போது நம் ஆண்டவர்
நம்மைக் குறித்து மகிழுவார்.
ஏசா உலகத்துக்குரியவனாக சித்தரிக்கப்பட்டாலும் யாக்கோபோடு அவன் கொண்டிருந்த
சகோதர பாசத்தை சொல்லி முடியாது. யாக்கோபை அழிக்க வகை தேடினவன் சகோதரனின் முகத்தைப்
பார்த்ததும் உள்ளம் உருகி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதது யாராலும்
ஆராய்ந்து பார்க்க முடியாத நேசத்தைக் காட்டுகிறது. இதுபோல நாம் நம் சகோதரருடன் நம்
அன்பை வெளிப்படுத்தியது உண்டா?
நீங்கள் ஆவியானவரால் அதிகமாய்
அட்கொள்ளப்பட்டிருப்பீர்களானால் இந்த சகோதர உணர்வு உங்கள் வாழ்க்கையில் அதிகமாய்
வெளிப்பட்டிருக்கும். சகோதர அன்பு என்கிற நதி உங்கள் உள்ளத்தில் இருந்து பொங்கி வர
ஆவியானவருக்கு இடம் கொடுங்கள். ஆவியானவரோடு இணைந்து உங்கள் இதய மதகை இப்பொழுதே
திறந்து கொடுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை. இந்த
அன்பு நதி உங்களை சுற்றி இருக்கும் அனைவரையும் உங்கள் பக்கமாய் கவர்ந்து
இழுக்கும்.
ஒரே மாம்ச இரத்தத்தினால் பிறந்த இருவரை சகோதரர் என்று
அழைக்கிறோம். இங்கே நான் குறிப்பிடும் சகோதர உறவு மாம்ச இரத்தத்தினால்
பிறந்தவர்களை அல்ல, நம் இரட்சகரின் திரு இரத்தத்தால் பிறந்தவர்களை குறிப்பிடுகிறேன். நம்
மாம்ச சகோதர்களை விட கிறிஸ்து இயேசுவினால் பிறந்தவர்கள் மேன்மையானவர்கள் என்ற
உண்மையை ஒருக்காலும் மறந்து விடக் கூடாது. இந்த கட்டளையை நமது அருள் நாதரிடத்தில்
பெற்றிருக்கிறோம். (மத்தேயு 12:46-50)
47 அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே
நிற்கிறார்கள் என்றான். 48 தம்மிடத்தில் இப்படிச்
சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 49 தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
50 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன்
எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய்
இருக்கிறான் என்றார்.
இதையே பவுலும், பேதுரும் சபைகளுக்குக்
கட்டளைகளாக கொடுப்பதை நாம் காண முடிகிறது. 1தெசொ4:9,10 , 2பேதுரு1:5-7
சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடு
அன்பையும் கூட்டி வழங்க முயற்சிப்போம். சகோதர சிநேகம் நம் உள்ளத்தில்
தழைத்தோங்கும் போது போட்டி பொறாமை பொசுங்கிப் போய்விடும். இன்று கிறிஸ்துவின்
ராஜியம் வேகமாய் வளர்வதை தடுப்பது நமக்குள் இருக்கும் போட்டி, பொறாமைகள் தான். ஆனால் சகோதர சிநேகத்தால் நீங்கள் நிரப்பப்படும் போது, என் சகோதரன் என்னை விட உயர் நிலை அடைய வேண்டும் என்ற உயரிய பண்பு
உங்களுக்குள் முளைக்கிறது. அனைவரையும் நீங்கள் வசீகரிக்கக் கூடிய மனிதராய் மாறி
விடுகிறீர்கள்.
இந்த இணையில்லா உன்னத சகோதர பாசம் பவுலுக்கும்
எப்பபிராதீத்துவுக்கும் இடையே இருந்ததால் தான், தன்னுடைய கடிதத்தில் எப்பபிராதீத்துவை அறிமுகம் செய்யும் போது தங்களுக்குள் இருந்த
சகோதர உறவை முதன்மைப்படுத்தி குறிப்பிடுகிறார்.
கிறிஸ்துவின் இரத்தம் அன்று கல்வாரியில் பாய்ந்து வந்தது
எதற்காக? நம் அனைவரையும் அவரது இரத்தத்தினால் மீட்டு ஒரே குடும்பமாக, சகோதரராக இணைப்பதற்குத்தான். அந்த கல்வாரி அன்போடு திருசபையிலும், உலகிலும் உள்ள சகோதர்களோடு நீங்கள் பழகும் போது கவரப்படுகிறீர்கள்.
ஆவியானவர் உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இப்போது கேட்கும்
கேள்வி,
2. உடன் வேலையாள்
இன்று கிறிஸ்தவ உலகில் யார் இந்த வேலையாள்? இயேசு
கிறிஸ்து தம்முடைய உன்னத பணியில் உள்ளவர்களையே வேலையாள் என்று அழைக்கிறார்
(மத்தேயு10:10, லூக்கா10:7). சோம்பேரியான
வேலையாள் யாராலும் கவரப்படமாட்டான், எஜமானுக்கும்
பிரயோஜனமற்றவனாகிறான். ஆனால் சுறுசுறுப்பான வேலையாள் எல்லாராலும் கவரப்பட்டு, எஜமானுக்குப் பிரயோஜனம் உள்ளவனாகிறான். இப்படிப்பட்டவன் எஜமானின்
இருதயத்தில் இடம் பிடிக்கிறான். இதை வாசிக்கும் நீங்களே அந்த வேலையாள்; நமது எஜமானர் இயேசு கிறிஸ்து; அவருடைய
இரத்தத்தினால் மீட்கப்பட்ட ஒவ்வொருவரும் உங்கள் உடன் வேலையாள்.
பவுலைப் போன்றவருக்கு உடன் வேலையாளாய் இருப்பது மிக மிக
கடினம். ஏனென்றால் அவரோ வாழ்ந்திருக்கவும், தாழ்ந்திருக்கவும், திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் அறிந்தவர். அவரை அடித்து உதைத்து
பட்டணத்திற்கு வெளியில் போட்டாலும் மறுநாளே எழுந்து அடுத்த பட்டனங்களுக்கு
பிரசங்கிக்கச் செல்வார். இப்படிப்பட்ட நெஞ்சுரம்
கொண்ட உறுதியான மனிதனுக்கு உடன் வேலையாளாய் இருப்பது எளிதல்ல. ஆனாலும்
பவுலடிகளுக்கு ஈடுகொடுத்து உழைத்துக் காட்டின மாவீரன் எப்பபிராதீத்து உங்கள் முன்
சவாலாய் நிற்கிறான்.
பவுல் எப்பபிராதீத்துவை உடன்-பிரசங்கி என்று
குறிப்பிடவில்லை. கர்த்தருக்கு இன்றைய தேவை பிரசங்கிகள் அல்ல கடினமான
உழைப்பாளிகளே. அவர்கள் பெயர் அவருடைய ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டிருகிறது.
கர்த்தருடைய இருதயத்தை நன்கு அறிந்த பவுலடிகள் தன்னுடைய உடன் வேலையாட்களை கடின
உழைப்பளிகளாய் உருவாக்கியிருந்தார்.
பிலி 4:3 அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என்
உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும்
பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில்
இருக்கிறது.
நாம் கடினமாய்ச் செய்யும் உலக வேலை கர்த்தருடைய கணக்கில்
வராது என்பதை நினைவில் கொள்வோம். நான் அதிகமான நேரம் உழைப்பேன் அதிகமாய்
கர்த்தருக்குக் கொடுப்பேன் என்ற மாய வலையில் இருந்து வெளியே வாருங்கள்.
கர்த்தருக்குத் தேவையானது உங்கள் பணம் அல்ல, அவருடைய தேவை எல்லாம்
நீங்கள் தான். உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட இன்றே தேவனுடைய
திருப்பணியில் கடினமாய் உழைக்க முன்வாருங்கள். (மத்தே 9:37,38)
எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். இங்கு ஆண்டவர் வேலையாட்கள் கொஞ்சமே என்று
வேதனைபடுகிறார். வயல் நிலங்கள் விளைந்திருக்கிறது. அதிகாலமே எழுந்து அரிவாளை
எடுத்து; பகலின் வெயிலில் நாள் முழுவதும் குனிந்தும்
நிமிர்ந்தும் நெளிந்தும் பொழுது சாயும் மட்டும் கதிர்களை வெட்டி சேகரிக்கும்
வேலையாட்கள் குறைவு. ஆனால் இந்த குறைந்த வேலையாட்கள் தான் அதிக பலனை அடையப்போகிறார்கள்.
தேவனுடைய ஐந்து வகையான ஊழியர்களும் கடின உழைப்பாளிகளாய்
இருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் ஊழியம் கடினமாய்
உழைப்பவருக்குத் தான், எல்லாரிலும் அதிகமாய்
பிரயாசப்பட்டேன் என்று முழங்கும் பவுல் போன்றோருக்குத் தான். ஆகவே தான் ஆதிசபையில்
அப்போஸ்தலர்கள் “ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப்
போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்” (அப்போ 6:24)
தீர்க்கதரிசன ஊழியம் கண்மூடி வித்தை
அல்ல. இரவும் பகலும் தேவ சமூகத்தில் காத்திருந்து தேவனோடு இணைந்து கொள்ளவேண்டிய
கடின பணி. தேவனுக்கே வாயாய் இருப்பதென்றால் சும்மாவா? நீங்களே
சொல்லுங்கள்.
மேய்ப்பனுடைய ஊழியம் சோம்பேறிகளுக்கு
அல்ல. இரா முழுவதும் கண் விழித்து கடும் குளிரிலும் வயல் வெளியில் தங்கி தம்
மந்தையை காக்கும் மனம் படைத்தவருக்குத் தான்.
நற்செய்தியாளனும் கடின உழைப்பாளி தான்.
வீடுகளிலும், தெருக்களிலும், வீதிகளிலும் தன் செய்தி அனைவரையும் கவரும் வண்ணம் எடுத்து சொல்பாவனாய்
விளங்க வேண்டும். எல்லா இன்னல்களையும் , கிறிஸ்துவின்
நிமித்தம் வரும் பாடுகளையும் சகிக்க வலிமையான இருதயம் கொண்டவனாய் ஸ்தேவானைப் போல
இருப்பவன் தான் நற்செய்தி பணிக்கு தகுதியுள்ளவன்.
போதகனும் கடின உழைப்பாளி தான். கிறிஸ்துவின்
போதனைகளை அவரை போலவே, அவராகவே மாறி போதிப்பது
எளிதல்லவே.
எல்லா ஊழியங்களும் கடினமாது என்று நீங்கள் சோர்ந்து விட
வேண்டாம். நாம் கடினமாய் உழைக்க வேண்டும் என்று தேவன் விரும்பினாலும், நமக்கு
கடினமான இடங்களைத் தருவதில்லை. ஏனென்றால் இயேசுவே
சொல்கிறார் “இதோ, வயல்
நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை
ஏறெடுத்துப்பாருங்கள்” (யோவா 4:35).
பலவீனனாக இருந்தாலும் தம் கடின உழைப்பால் பவுலடிகளை
கவர்ந்திழுத்த எப்பாப்பிரோதீத்து உங்களுக்கு சவால் விடுகிறான். அவனுடைய பிரசங்கமோ, போதனையோ அல்ல அவனுடைய வாழ்க்கையே உங்களுக்கு சவால் விடுகிறது. உங்கள்
ஆவிக்குரிய தலைவர்களுக்கு உதவிட கடினமாய் உழைத்திடுங்கள், கவர்ந்திழுக்கும் மனிதனாய் மாறிடுங்கள்.
ஆவியானவர் உங்கள் ஆழ் மனதில் கேட்கும் இந்த கேள்விக்குச்
செவி கொடுப்பீர்களா?
எஞ்சிய காலத்தில் கடின உழைப்பால் நீ
கவர்ந்திழுப்பவனானால்........?
3. கனமுள்ளவன்:
(ரோமர்12:10)“சகோதர
சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே
ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்”
இந்த வசனத்தின் படி வாழ்ந்த பவுலடிகள் தனக்கு பணிவிடை செய்த
எப்பாப்பிரோதீத்துவை குறித்து பிலிப்பி சபையாருக்கு ஒரு கட்டளை கொடுக்கிறார், (பிலி 2:29) “ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை
ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.”
ஆதிசபை எப்பாப்பிரோதீத்துவைப் போன்ற நற்குணசாலிகளுக்கு அதிக
மரியாதை கொடுத்தது. ஆகவே தான் பவுலடிகள், எப்பாப்பிரோதீத்து
போன்றவர்களை கனம் பண்ண வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகிறார். இன்று சபை யாரை
கனம் பண்ணுகிறது. தனவான்களை சபை கனம் பண்ணும் பொல்லாத காலத்தில் நாம் வாழ்கிறோம்.
இவர்களுக்குத் தான் சபையிலும் சங்கத்திலும் முதல் இடம். எப்பாப்பிரோதீத்துவை போன்ற
நல்ல குணம், மென்மையான மனம் படைத்தவரைத் திரும்பிப்
பார்க்க ஆள் இல்லை. ஆனால் தேவன் மனிதன் பார்க்கிற பிரகாரமாய் பார்க்கிறவர் அல்லவே!
உலகத்திற்கு மேன்மையாய்த் தெரிகிறவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். ஆனால்
உள்ளத்தில் உயர்ந்தவர்கள் உன்னதருக்கு உகந்தவர்கள். கிறிஸ்துவின் ஊழியத்தின்
நிமித்தம் தன் உயிரையே துச்சமாய் மதித்து செயல்படும் எப்பாப்பிரோதீத்து
போன்றவர்கள் தேவனுடைய பார்வையில் கனமுள்ளவர்கள். நீங்கள் ஆவியானவரோடு இணைந்து
செயல்படுபவராய் இருந்தால் ஒருமுறையாவது உங்கள் சபையில் அல்லது ஐக்கியத்தில்
மிகவும் வறுமையில் வாழும் நல்ல குணம் படைத்தோரை நீங்கள் கனம் செய்திருப்பீர்கள், உங்கள் வீட்டு விழாவிற்கு; விருந்திற்கு; ஒரு வேளை சாப்பாட்டிற்காவது அழைத்திருப்பீர்கள், கிறிஸ்துவின் நிமித்தம் தன்னுடைய உறவுகளை விட்டு வந்தவரை நீங்கள்
ஆதரித்திருபீர்கள். “இப்படிப்பட்டவர்களை கனம்
பண்ணுங்கள்” என்ற பவுலடிகளின் கட்டளை ரீங்காரமாய்
உங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.
ஒருவனுடைய உயர்வும், தாழ்வும் அவனுடைய
செல்வத்தாலோ தாலந்துகளாலோ அல்ல. ஒருவனுடைய உயர்வும், தாழ்வும்
அவனுடைய வாழ்கையைப் பொறுத்ததே. அப்படிப்பட்டவன் தான் எப்பாப்பிரோதீத்து.
ஏனென்றால் பவுலடிகளுடைய இருதயத்தையே கவர்ந்துவிட்டானே. பர்னபாவிடம் பாராட்டு
பெறுவது கடினம் அல்ல, அவன் மிருதுவானவன். பின்வாங்கிப்
போனவர் பின்னால் சென்று அவர்களை திரும்பி வரப் பண்ணுவது அவன் ஊழியம். ஆனால்
பவுலின் ஊழியமோ கடினமானது. அரண்களை நிர்மூலமாக்கி, சத்துருவின்
கோட்டைகளை உடைத்து எறிவது பவுலின் ஊழியம். இப்படிப்பட்டவரிடம் கனம் பெற்ற கவர்ந்து
இழுக்கும் மனிதன் தான் எப்பாப்பிரோதீத்து.
கனம் என்பது நாமாய் தேடித் போவது அல்ல, நம்முடைய
வாழ்க்கை சகோதர சிநேகத்தாலும், கடின உழைப்பாலும் மலரும் போது, அனைவரையும் நம்பால்
கவர்ந்து இழுத்துக் கொண்டுவரும் நறுமணமே கனம்.
உங்கள் வாழ்க்கை நறுமணமாய் மாற ஆவியானவருக்கு இடம்
கொடுங்கள்.
இந்தச் செய்தியின் மூலமாய் ஆவியானவர் உங்கள் உள்ளத்தில் ஒரே
ஒரு கேள்வியோடு உங்கள் பதிலுக்கு ஏங்கி நிற்கிறார்,
நீ கவர்ந்திழுப்பவனானால்.......
(யோவான் 12:26) ஒருவன்
எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான்
எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன்
எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

No comments:
Post a Comment